இப்போது ஏகப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்டார்ட்–அப் நிறுவனங்கள் வதவதவென இருக்கின்றன. இதில் பெங்களூருதான் டாப்; அங்கே ஏகப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஸ்கூட்டர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

தெலங்கானா மாநிலத்தையும் சும்மா சொல்லக் கூடாது. அதில் முக்கியமான ஒரு நிறுவனம் – பென்லிங் இந்தியா (Benling India). இது இந்திய நிறுவனம் இல்லை; சீன நிறுவனம். ஆனால், தெலங்கானா மாநிலத்தில் சக்கைப் போடு போடும் நிறுவனம். Benling India என்பது பென்லிங் நிறுவனத்தின் சப்சிடரி நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து Aura, Falcon and Kriti என்று 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகிக் கொண்டு வருகின்றன. 

இந்த பென்லிங் நிறுவனத்தின் ஸ்கூட்டர் ஒன்று, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெலங்கானா மாநிலத்தில் ஓர் ஊரில் தீப்பிடித்து எரிந்து போனதில், ஸ்கூட்டரின் பல பாகங்கள் தீக்கிரையாகின. பேட்டரி எக்ஸ்ப்ளோடு ஆகி ஸ்பார்க் ஆகி வெடித்ததால் தீ ஏற்பட்டது என்கிறார்கள். அந்த ஸ்கூட்டரின் வாடிக்கையாளர், ‘தனக்கு ரீ ப்ளேஸ்மென்ட் ஸ்கூட்டர் வேண்டும்; கூடவே பாதிப்புகளுக்கு நஷ்டஈட்டுத் தொகை வழங்க வேண்டும்’ என்கிற வேண்டுகோளோடு, கம்பெனிக்கும் டீலருக்கும் மாறி மாறி புகார் கொடுத்து நடையாய் நடந்தும், அதைக் கண்டுகொள்ளவில்லையாம் பென்லிங் டீலர்ஷிப். இதைத் தொடர்ந்து அந்த வாடிக்கையாளர் கோர்ட் உதவியை நாடியும், அந்த கமிஷன் முன்பு பென்லிங் கம்பெனி ஆஜராகவில்லை போல் தெரிகிறது. 

இதனால் கடுப்பான தெலங்கானா கன்ஸ்யூமர் கமிஷன், ‘பென்லிங் இந்தியா டீலர்ஷிப், பாதிக்கப்பட்ட அந்த வாடிக்கையாளருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாகத் தர வேண்டும்’ என்று தீர்ப்பளித்திருக்கிறது. 

Benling

அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏப்ரல் மாதம் 2021–ல் பர்ச்சேஸ் செய்யப்பட்டிருக்கிறதாம். வாங்கிய மூன்றே ஆண்டுகளில் அது திடீரெனத் தீப்பற்றியது, தரம் குறைந்த பேட்டரிதான் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். 

ஸ்கூட்டர் வாங்கும்போது கம்பெனி அறிவுறுத்தியபடியே தான் வண்டி ஓட்டியதாகவும், ஓவர்லோடெல்லாம் அடிக்கவில்லை எனவும், சூரிய ஒளிக்குக் கீழே சார்ஜ் போடுவதில்லை எனவும், வழக்கம்போல் சார்ஜ் போட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென பேட்டரி வெடித்ததாகவும் சொல்கிறார் அந்த வாடிக்கையாளர். அவர், வழக்கமாக சார்ஜ் போடுவதுபோல், 2023, பிப்ரவரி 26–ம் தேதி இரவு 11.30 மணிக்கு சார்ஜ் போட்டுவிட்டுப் போனவர், 27–ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பேட்டரி வெடித்த சத்தம் கேட்டு வந்திருக்கிறார். திடீரென ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்து, அந்தப் புகை வீடு முழுவதும் பரவி, பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் தனது புகாரில் சொல்லியிருக்கிறார். ஸ்கூட்டர் எரிந்ததில் இருந்து தனது குடும்பத்தினர் தினமும் இரவு நிம்மதியாக உறங்கவில்லை எனவும் அவர் மனம் நொந்திருந்தார். இந்த மனஉளைச்சலுக்காகவும் சேதாரத்துக்காகவும் தனக்கு 13.5 லட்ச ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

‘‘ஒரு எலெக்ட்ரிக் வாகனம் தீக்கிரையாவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும் என்ன காரணம் என்று வாகன உற்பத்தியாளர்தான் பதில் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்த பென்லிங் ஸ்கூட்டர் விஷயத்தில், இந்த உற்பத்தியாளர்களிடம் குறைந்தபட்ச அக்கறைகூடக் காட்டவில்லை; இது மற்ற வாடிக்கையாளர்களையும் பாதிக்கக்கூடாது என்கிற நோக்கில் இந்த நஷ்டஈட்டுத் தொகையை அபராதமாக விதிக்கிறோம்!’’ என்று தெலங்கானா கன்ஸ்யூமர் கமிஷன் அறிவித்திருக்கிறது. 

இது தவிர, Litigation Charges எனும் வழக்கு தொடர்ந்த செலவுக்காகவும் 10,000 ரூபாயும் சேர்த்துத் தர வேண்டும் என்று பென்லிங் டீலர்ஷிப்புக்கு உத்தரவிட்டிருக்கிறது கமிஷன். 

வாடிக்கையாளருக்கு இது வெற்றி என்றாலும், உயிரைக் கையில் புடிச்சுக்கிட்டே அலைய முடியாதில்லையா!



from ஆட்டோமொபைல் செய்திகள் https://ift.tt/qQAoaGS